International02 August 2026

விதிகளை மீறி செயற்படும் 129 மதுபானசாலைகள் - தமிழக அரசுக்கு அண்ணாமலை அதிரடி கடிதம்!

தமிழகத்தில் பாடசாலைகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயற்பட்டு வந்த 717 மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், விதிகளை மீறி மேலும் 129 மதுபானசாலைகள் செயற்பட்டு வருவதாகவும், அவற்றையும் உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மே 12ஆம் திகதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவில் செயற்பட்ட 717 மதுபானசாலைகள் அடையாளம் காணப்பட்டு மூட உத்தரவிடப்பட்டது.

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஜூலை மாதம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துவதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு அறிவித்துள்ளதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கான கொள்கை அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் மது அருந்துவோர் விகிதம் 14.2 சதவீதமாக இருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் மதுப்பயன்பாடு குடும்பங்களின் சேமிப்பைப் பாதிப்பதோடு, சுகாதார செலவினங்களையும் மாநிலத்தின் உற்பத்தித் திறனையும் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் நடத்திய மாதிரி ஆய்வில் 10 கடைகள் விதிகளை மீறிச் செயற்பட்டது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைச் சரிபார்த்ததன் மூலம் 500 மீட்டர் சுற்றளவுக்குள் தொடர்ந்து செயல்பட்டு வரும் 129 மதுபானசாலைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அந்த 129 மதுபானசாலைகளின் பட்டியலையும் இணைத்து அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, அவற்றை விரைவாக மூடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes