General03 August 2026

ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையொன்றுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், அவரைப் பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையில் தடுப்பில் வைப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்லச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி , குறித்த உத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes