General03 August 2026

யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் தளபதியாக கடமையாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ என்ற பிரதிவாதிக்கு பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பாடநெறியில் பங்கேற்பதற்கு சட்டவிரோதமான முறையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டின் ஊடாக சட்டவிரோதமான முறையில் லாபத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப்பத்திரிகைகளை கையளிப்பதற்காக பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தினால் விரைவில் அழைப்பாணை அனுப்பப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes