General04 August 2026

ஆட்ட நிர்ணய சதி - கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் அதிரடித் தடை

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க சர்வதேச கிரிக்கெட் வீரர் அகிலேஷ் ரெட்டிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

26 வயதான அகிலேஷ் ரெட்டி, அபுதாபி டி10 தொடரின் போது கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதிகளின் 3 பிரிவுகளை மீறியதாக கடந்த நவம்பர் மாதம் குற்றம்சாட்டப்பட்டு, தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

போட்டிகளின் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றமை, மற்றொரு வீரரை முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயன்றமை மற்றும் விசாரணைக்குத் தேவையான கைபேசித் தரவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை அழித்தமை ஆகியவை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புத் தீர்ப்பாயத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த 8 ஆண்டு காலத் தடை 2025 நவம்பர் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்றொரு வீரரை முறைகேடான செயலில் ஈடுபடுத்த அகிலேஷ் ரெட்டி மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அகிலேஷ் ரெட்டி இறுதியாக 2023 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தேசிய அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes