General06 August 2026

புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!

புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்தப் பாம்பை விற்பனை செய்த நபர் ஆகியோருக்குக் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்விலவில் உள்ள கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலகத்தினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்கீழ் குறித்த இளம் பெண்ணும், பணத்தைப் பெற்றுக்கொண்டு மலைப்பாம்பை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஜூலை 22 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதன்பேரில், பாதுகாக்கப்பட்ட விலங்கு ஒன்றை வைத்துக்கொண்டு நடனமாடிய குற்றத்துக்காக இளம் பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கை வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட எந்தவொரு வனவிலங்கையும் வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான விதியை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes