General06 August 2026

2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சாம்பியா உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் இலங்கை பரஸ்பர சட்ட உதவியை கோரியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளே இலங்கை சட்ட உதவி கோரியுள்ள ஏனைய நாடுகளாகும்.

கடன் சேவையின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் திருட்டுக்குள்ளான விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தப் பரிவர்த்தனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விசாரணை நிலவரங்கள் கருதி மேலதிக விபரங்களை வெளிப்படுத்த மறுத்ததுடன், அந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உறுதிபடக் கூறினார்.

அதேவேளை, விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதித் திருட்டுத் தொடர்பாக நிதியமைச்சை கடுமையாக விமரிசித்தனர்.

இந்தத் தவறுக்கு நிதியமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தெளிவுபடுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes