International08 August 2026

பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!

பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளின் அளவைக் கொண்டு ஆண்டொன்றில் சுமார் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நாட்டின் தேசிய மருந்தக சங்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் தரவுகளை பகுப்பாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இங்கிலாந்தில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 3,400 டன் எடையுள்ள, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட (பயன்பாட்டின் பின் எஞ்சிய) மருந்துகள் குப்பையில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மருந்துகள் வீணடிக்கப்படுவதனால் பிரித்தானிய தேசிய சுகாதார சேவைக்கு ஆண்டுக்கு குறைந்தது 480 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டு நோயாளர்களுக்கான ஏனைய சுகாதாரச் சேவைகளை மேலும் மேம்படுத்த முடியும் என்றும், வீணாகும் மருந்துகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தேசிய மருந்தக சங்கத்தின் தலைவர் ஒலிவியர் பிகார்ட் (Olivier Picard) தெரிவித்துள்ளார்.

எனவே, நோயாளர்கள் தங்களுக்கு உண்மையாகவே தேவைப்பட்டால் மட்டுமே மேலதிக மருந்துகளைக் கோர வேண்டும் என்றும், பலவகை மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள் தங்களது மருந்துத் தேவைகளைத் தவறாது மீளாய்வு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes