General11 August 2026

தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்: சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்!

தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனக் கூறி, அவற்றுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி தற்போதைய பிரதம நீதியரசரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அண்மையில் வெளியிடப்பட்டக் கூற்றுகள் தீவிர கவனத்திற்குரிய விவகாரமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் கூட்டுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத் திருத்த யோசனைகள் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அவை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 14 நாட்களுக்குள் அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு தரப்பிற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

இந்தநிலையில்,சட்டத்தரணிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கிலான நடவடிக்கை என சித்தரிக்கும் வகையில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாகவும், இந்தக் கூற்றுகள் பொதுமக்களையும் மகா சங்கத்தினரையும் தவறாக வழிநடத்துவதாகவும் அபேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கு சட்டத்தரணிகள் சங்க தலைமைத்துவம் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளபோதிலும், பிரதம நீதியரசரை இலக்கு வைத்துத் தனிப்பட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குச் சங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்த விடயத்தில் சங்கத்தின் தற்போதைய மௌனமானது, குறித்த கருத்துகளைச் சங்கம் அங்கீகரிப்பதாகவே பொதுமக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்தும் எனக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டத்தரணிகள் சங்கம் தனது தொழில்முறைத் தன்மையைப் பேணித் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவுடன் இது குறித்துக் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறும் ஜகத் அபேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes