International11 August 2026

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழ்நாடு சபாநாயகர் பங்கேற்றமையால் சர்ச்சை!

கருக்கலைப்புக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பேரணியொன்றில் தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டமை தொடர்பில் சர்ச்சை உருவாகியுள்ளது.

சென்னையிலுள்ள கல்லூரியொன்றில் மெட்ராஸ் - மயிலாப்பூர் பேராயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 ஆவது தேசிய 'வாழ்வுக்கான பேரணியில்' தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

கருக்கலைப்பு உரிமைகளுக்கு எதிராகவும், பிறக்காத குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடாத்தப்பட்ட இந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், கருவுறும் போதே உயிர் உருவாகிவிடுகின்றது எனக் குறிப்பிட்டதுடன், பிறக்காத ஒவ்வொரு குழந்தைக்கும் கண்ணியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இந்தியாவின் மருத்துவ ரீதியிலான கர்ப்பக் கலைப்புச் சட்டத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்தப் பேரணியில் சபாநாயகர் கலந்துகொண்டமைக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்த நாட்டின் அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் பெண்களின் உடலியல் சுதந்திரமும் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமையும் அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சார்ந்த உயர் பதவியிலுள்ள ஒருவர் இதில் கலந்துகொண்டமை பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சுகாதார அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், இந்தியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி 20 வாரங்கள் வரை பெண்கள் சட்டப்பூர்வமாகக் கருக்கலைப்பு செய்ய முடியும் என்றும், பல மருத்துவச் சூழல்களில் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாத மருத்துவ அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சபாநாயகரின் தனிப்பட்ட கருத்துக்களைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes