General12 August 2026

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்

யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை - தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர், நேற்று(11) யால காப்பகத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டின் போது இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், திஸ்ஸமஹாராம - எல்லகல இடதுகரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes