General13 August 2026

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது: படகும் பறிமுதல்!

தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவலை முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட போதே இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மன்னார் தீவு மற்றும் இராமர் பாலம் என்பவற்றைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு விசேட கடற்றொழில் முகாமை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes