General14 August 2026

கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!

கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 விநியோக நிலையங்களுக்கு அனுப்பப்படவிருந்த தரம் 01 (தமிழ் மொழி) 3ஆம் தவணைக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் குறித்த இடங்களுக்குச் சென்றடையாமல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தலங்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் என்.டபிள்யூ.டி. ஹிரோஷி குணவர்தன என்பவரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19,892 பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் இருந்து குறித்த புத்தகத் தொகுதியை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் பியகம, சமுர்த்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு கொண்டு செல்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே மாதம் 4ஆம் திகதி 43-9874 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தி சாரதியின் பொறுப்பின் கீழ் குறித்த புத்தகத் தொகுதி கொண்டு செல்லப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாண கல்வி வெளியீட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான ஜகத் வன்னியாராச்சி, மே 7ஆம் திகதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியதுடன், கிழக்கு மாகாணத்தின் 12 விநியோக நிலையங்களுக்கும் குறித்த பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்கள் திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தே தலங்கம காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலங்கம காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் நிசங்க சில்வாவின் வழிகாட்டலில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes