General14 August 2026

இந்திய உந்துருளிகளில் அதிக வேகத்தில் செல்லும் இளைஞர்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

இலகுரக இந்திய வகை உந்துருளிகளில் இளைஞர்கள் அதிக வேகத்தில் செல்வதைத் தவிர்க்குமாறு காவலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளினாலேயே வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதிப்போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, வேலைக்குச் செல்லுதல், நகருக்குப் பயணித்தல் மற்றும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பொதுவான போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் தேர்வாகவே இந்த உந்துருளிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், 18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பல இளைஞர்கள் தற்போது இந்த உந்துருளியை அதிவேகத்தில் செலுத்துவதற்குப் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்த உந்துருளிகள் குறைந்த எடையும், குறைந்த எரிபொருள் பயன்பாடும் கொண்டவை. ஆனால், இவற்றை மிக அதிக வேகத்தில் செலுத்தி திடீரென வேக கட்டுப்பாடு பயன்படுத்தும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன.

வலுவான வேக கட்டுப்பாடு அமைப்புகளைக் கொண்ட எடைகூடிய ஜப்பானிய உந்துருளிகளை போல் இல்லாமல், இந்திய உந்துருளிகள் அதிவேகத்தில் செல்லும்போது சறுக்கி விழக்கூடியவை அல்லது சரியான நேரத்திற்குச் செயல்படத் தவறக்கூடியவை" என பிரதி காவல்துறை மாஅதிபர் சேனாதீர விளக்கமளித்தார்.

அதிவேகம் மற்றும் திடீர் வேக கட்டுப்பாட்டை பயன்படுத்துதல் காரணமாக ஏற்படும் விபத்துகள் குறித்து காவல்துறைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதன் போது உந்துருளிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த உந்துருளிகள் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ அல்லது சாகசங்களில் ஈடுபடுவதற்கோ தயாரிக்கப்பட்டவை அல்ல என அவர் வலியுறுத்தினார்.

போக்குவரத்து வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொறுப்புடன் பயணிக்குமாறு இளைஞர்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes