General16 August 2026

சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்

சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes