General15 August 2026

சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துதல் தொடர்பான 1956ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் புதிய சட்டமூலத்தின் ஊடாக, சட்ட மீறல்களுக்கான அபராதத்தை 10 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைகளுக்கு அமைவாக இலங்கையின் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்கும் நோக்கில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஸ தலைமையிலான கல்வி, மனிதவளம் மற்றும் மனித மூலதனம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் ஆராயப்பட்டது.

தற்போதுள்ள அபராதத் தொகைகள் சட்ட மீறல்களைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திருத்தம் காலத்தின் தேவையாகும் எனக் குறிப்பிட்டு குழுவினால் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் வேலைவாய்ப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்தைப் பாதிக்கக்கூடிய அபாயகரமான தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சட்டத்தை மீறுவோருக்கு நீதிமன்றத்தினால் 10 ஆயிரம் ரூபா வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க முடியும். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தின் மூலம், சட்டத்தின் 7(3), 13(2) மற்றும் 20(a)(3) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, குறித்த குழுக் கூட்டத்தில் தொழில் அமைச்சு, தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes