International16 August 2026

80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் அவரது ஆடையில் காணப்பட்ட தேசியக் கொடி வடிவமைப்பு ஆகியவை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

சுதந்திர தின உரையின் போது நாட்டின் மின்சார வாகன விற்பனை குறித்துக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2009-10 ஆம் நிதியாண்டில் 25 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையானதாகத் தவறாகத் தெரிவித்தார்.

பின்னர் உடனடியாகத் தனது கூற்றைத் திருத்திக் கொண்ட அவர், அது 1.5 இலட்சம் என்றும், 2025-26 ஆம் நிதியாண்டில் இந்த விற்பனை 25 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் விளக்கமளித்தார்.

பிரதமரின் இந்த தடுமாற்றம் குறித்து விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், "நம்பிக்கையற்ற மற்றும் பதற்றமான நிலையிலேயே பிரதமர் காட்சியளிக்கிறார்" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, பிரதமர் மோடி அணிந்திருந்த சட்டையின் பையில் பொறிக்கப்பட்டிருந்த மூவர்ணக் கொடி தலைகீழாகக் காட்சி அளித்தமையும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தேசியக் கொடியில் முதலாவதாக இருக்க வேண்டிய காவி வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் காணப்பட்டதுடன், இது அயர்லாந்து நாட்டின் தேசியக் கொடியை ஒத்திருப்பதாகக் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது குறித்து நகைச்சுவையாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் உள்ளதா அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes