General16 August 2026

நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து 10 பேர் மீட்பு!

யாழ்ப்பாணம் - குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு படகோட்டிகள் உட்பட 10 பேருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு பயணத்தின் இடையே விபத்துக்குள்ளானது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த படகானது, உரிய நேரத்தை கடந்தும் இலக்கை அடையாத காரணத்தால் அது குறித்து நெடுந்தீவிலிருந்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடல் நடுவே விபத்துக்குள்ளான படகு கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணித்த 10 பேர் மீட்கப்பட்டு உடனடியாக நயினாதீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes