General16 August 2026

தேசிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கவும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் சஜித் யோசனை!

பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இத்தகைய குறைந்த கட்டண நடைமுறை மூலம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஈர்க்க முடியும் என்றும், இதன் மூலம் தேசிய பூங்காக்களின் நுழைவாயில்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வனஜீவிகள் திணைக்களத்தில் நிலவும் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார்.

திணைக்களத்துக்கு 33 கால்நடை மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 17 பேர் மட்டுமே சேவையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மனித-விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்துவதிலும், யானை மற்றும் சிறுத்தைகளுக்குச் சிகிச்சையளிப்பதிலும் இவர்கள் முக்கிய பங்காற்றுவதால், வனத்தாவரங்கள் மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இவர்களுக்கான சட்டபூர்வ அதிகாரங்களையும் பதவி உயர்வுகளையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், நாட்டின் வறட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி, அவற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், இரவு பகலாகப் பணியாற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes