General17 August 2026

எரிபொருள் மானியம் வழங்கப்படாவிடின் விலை அதிகரிக்கப்படும்: வலுசக்தி அமைச்சு எச்சரிக்கை!

எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றம் இறக்குமதிச் செலவை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இதுகுறித்த மீளாய்வை மேற்கொள்வது அவசியமானது எனக் தெரிவித்துள்ளார்.

இந்த மீளாய்வுக்குப் பின்னர், அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டுப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் கோரவுள்ளதாகவும், அல்லது நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விலைத் திருத்தம் போன்ற மாற்று வழிகளை நாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, அது ஜூலை மாதம் அமுலுக்கு வந்த போதிலும், நடப்பு மாதத்தில் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய கிழக்கு போர் வெடித்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றபோதிலும், தொடர்ந்து அதிகரிக்கும் உலகச் சந்தை விலை பெரும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes