International22 August 2026

ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி

ஐக்கிய நாடுகள் சபைக்கு 725 மில்லியன் டொலர்களை செலுத்தவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம், காங்கிரஸ் என்ற நாடாளுமன்றுக்கு அறிவித்துள்ளது.

இது, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபைக்கு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான நிலுவைத் தொகையில் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செலுத்தவுள்ள 725 மில்லியன் டொலர் என்பது, அமெரிக்கா, ஐக்கிய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய 4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையில் 20 வீதத்துக்கும் குறைவானதாகும்.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபை, அதன் முழுத் திறனுக்கு ஏற்ப செயற்படவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகம் விமர்சித்துள்ளதுடன், பல ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கான நிதிகளையும் குறைத்துக்கொண்டது .

இந்தநிலையில்,ஐக்கிய நாடுகளுக்கான எந்தவொரு செலுத்துதலும் அந்த அமைப்பின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களைப் பொறுத்தே அமையும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 80 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பு, தனது நிதி நெருக்கடிக்கு மத்தியில் "ருN80" என்று அழைக்கப்படும் ஒரு சீர்திருத்தம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அது ஏற்கனவே தனது 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை 9.2 வீதம் குறைத்துள்ளதுடன், ஜெனீவா மற்றும் நியூயார்க் போன்ற அதிக செலவுள்ள நகரங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட வேலைகளை குறைந்த செலவுள்ள மையங்களுக்கு மாற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை,இந்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்காக, அதன் 193 உறுப்பு நாடுகளிடமிருந்து சுமார் 90 வீத நிலுவைத் தொகையை வசூலிக்க நம்பியிருந்தது என அதன் கட்டுப்பாட்டாளர் சந்திரமௌலி ராமநாதன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் பாதீட்டுக்கு அமெரிக்காதான் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது,

ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அது வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பணிகளுக்கான வரவுசெலவுத் திட்டங்களுக்குக் கட்டாயப் பணம் செலுத்த மறுத்துவிட்டதுடன், ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கான தன்னார்வ நிதியுதவியையும் குறைத்துள்ளது.

கடந்த மே மாதத்தில், வோஷிங்டன் தங்களுக்குச் செலுத்த வேண்டிய 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையில், வழக்கமான பாதீட்டு திட்டத்துக்காக 2.04 பில்லியன் டொலர்,தற்போதைய மற்றும் கடந்தகால அமைதி காக்கும் பணிகளுக்காக 2.2 பில்லியன் டொலர் மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயங்களுக்காக 44 மில்லியன் டொலர் ஆகியவை அடங்கும் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes