General22 August 2026

நீதி அமைச்சர் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் - தினன தகுண கண்டனம்!

இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட கருத்து, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக 'தினன தகுண' சிவில் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் "எப்படியும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலையில் உள்ள பின்னணியில், அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டமை கண்டிக்கத்தக்கது என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னர், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான கூற்றை வெளியிடுவது சுயாதீன நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியா என்ற நியாயமான சந்தேகம் எழுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இதுபோன்ற கருத்தொன்றை வெளியிட்டிருந்ததை நினைவுபடுத்திய அந்த அமைப்பு, நீதித்துறை செயற்பாடுகளில் தலையிடும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes