General25 August 2026

இலங்கையின் கடன் தரவரிசை 'Caa1' ஆக உறுதி- அறிவித்த மூடீஸ் தரநிர்ணய நிறுவனம்

இலங்கையின் நீண்டகால அந்நியச் செலாவணி, வழங்கி மற்றும் கடன் தரவரிசை மதிப்பீட்டில் 'Caa1' ஆக சர்வதேச தரநிர்ணய நிறுவனமான மூடீஸ் உறுதிசெய்துள்ளது.

Caa1 தரமதிப்பீடு என்பது, கடன் மோசமான நிலையில் இருப்பதையும், மிக அதிக கடன் அபாயத்தைக் கொண்டிருப்பதையும் குறிக்கும் குறிக்காட்டியாகும்.

2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார சீராக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், கடன் தாங்குதிறன் மற்றும் கடன் சுமை இன்னும் பலவீனமாகவே உள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் காரணமாக அரச வருமானம் அதிகரித்து, முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரி நிலைப்பேணப்படுகிறது.

இருப்பினும், அரசின் வருமானத்தில் 40 வீதத்துக்கும் அதிகமான தொகை வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 95 வீதமாக இருக்கும் என்றும் மூடீஸ் கணித்துள்ளது.

இலங்கையின் இறக்குமதிச் செலவுகளுக்கான அந்நியச் செலாவணி கையிருப்பு 3 மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது.

எனவே, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்படக்கூடிய எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத்துறை வருமானப் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சவாலாக அமையலாம்.

குறுகிய காலத்தில் பொருளாதாரம் மீட்சியடைந்தாலும், திறமையான பணியாளர்களின் வெளிநாட்டு வெளியேற்றம் மற்றும் தனியார் துறை முதலீடுகளின் வீழ்ச்சி காரணமாக நடுத்தர காலப் பொருளாதார வளர்ச்சி சுமார் 4 வீதமாக மட்டுமே இருக்கும் என்று மூடீஸ் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியக்கடன் திட்டம், 2027 ஆம் ஆண்டுடன் நிறைவடையும்.

அதன் பின்னர், 2028 முதல் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பு படிப்படியாக அதிகரிக்கும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத் திட்டம் முடிந்த பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதே இலங்கையின் கடன் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் என்று மூடிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes