General25 August 2026

துபாயில் கைதான 'பஸ் லலித்' இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளார் !

துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு துபாய் காவல்துறையினரால கைது செய்யப்பட்ட அவர், இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையின் விசேட குழுவினரால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக பஸ் லலித் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று துபாய் சென்றிருந்தது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பஸ் லலித்திடம், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes