General26 August 2026

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!

வட நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 484 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 93 நேபாள பிரஜைகளும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன வெளிநாட்டவர்களில் 134 இந்தியர்கள், 47 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 34 அவுஸ்திரேலியர்கள் அடங்குவதாக நேபாள சுற்றுலா சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் 88 பேரை மீட்டுள்ளதாக பாக்மதி மாகாண காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேபாள இராணுவம் மற்றும் ஏனைய காவல்துறைப் பிரிவினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் ரசுவா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சந்தைகள், நீர்மின் திட்டங்கள், வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நிலநடுக்கம் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு, அது போதே கோஷி நதிக்கரையில் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தியதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவின் பீகார் மாநில அதிகாரிகளும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes