General27 August 2026

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கையிடமிருந்து நிவாரணப் பணிகளுக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாள அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இலங்கையால் வழங்கக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes