General28 August 2026

உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!

நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகள் போன்ற பேரிடர்களின்போது சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் சென்றடைவதற்கு முன்பாகவே அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில், ‘சைபோர்க்’ கரப்பான் பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக Advanced Science அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ‘பாராபோர்க்ஸ்’ (Paraborgs) என அழைக்கப்படும் இந்தக் கரப்பான் பூச்சிகளின் உடலில் சிறிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வடக்கு குயின்ஸ்லாந்தில் காணப்படும் பெரிய நிலத்தடி கரப்பான் பூச்சிகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகின் அதிக எடை கொண்ட கரப்பான் பூச்சி இனங்களில் ஒன்றான இவை, சுமார் 8.5 சென்டிமீற்றர் வரை வளரக்கூடியவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய அளவிலான ஊசி செலுத்தும் கருவிகள் மற்றும் கெமராக்கள் அடங்கிய பைகளும் அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நரம்பு மண்டலத்தில் பொருத்தப்பட்ட மின்முனைகள் மூலம் சிறிய மின்சார சமிக்ஞைகளை வழங்கி, அவற்றின் இயக்கத்தை ஆய்வாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.

இதன்மூலம், குறிப்பிட்ட இடங்களைச் சென்றடைவதில் கரப்பான் பூச்சிகள் 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்துள்ளன. அதேவேளை, மருந்தை இலக்கிடப்பட்ட இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதில் ஒட்டுமொத்தமாக 72 சதவீத வெற்றி கிடைத்துள்ளதாக ஆய்வகப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இலக்கிலிருந்து 15 சென்டிமீற்றர் தொலைவுக்குள் இருந்து மருந்து செலுத்தப்பட்டபோது, வெற்றி விகிதம் 95 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

பாம்புக்கடி அல்லது கடுமையான ஒவ்வாமை போன்ற அவசர நிலைகளில், மீட்புக் குழுவினர் சென்றடைவதற்கு முன்பாக இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவியை வழங்க இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயன்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தற்போதைய பரிசோதனைகள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகச் சூழலில் சிலிகான் இலக்குகள் மற்றும் பன்றியின் தோலைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிஜ உலகில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, சிக்கலான நிலப்பரப்பு, தொலைத்தொடர்பு சமிக்ஞை துண்டிப்பு மற்றும் மருந்தை பாதுகாப்பாகச் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes