General30 August 2026

பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!

பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.

அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes