General30 August 2026

ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!

சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, ஹக்கல பகுதியில் தாவரப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தலைமையில் அண்மையில் விசேட கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த விஜயம் இடம்பெற்றது.

இதன்போது ஹக்கல பிரதேசத்தின் தனித்துவமான புவியியல் அமைப்புக்குரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்காகத் தாவரப் பாதுகாப்பு மையம் ஒன்றையும், ஆய்வுகளுக்கான அடிப்படை ஆய்வகம் ஒன்றையும் நிறுவுவது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன், இயற்கை அழகைப் பாதுகாத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய நடைபாதைகளைக் கொண்ட சூழல் சுற்றுலா வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இயற்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சுற்றாடலை 'பூஜ்ஜிய உமிழ்வு' (Zero-Emission) வலயமொன்றாக அபிவிருத்தி செய்யவும், அரிய தாவரங்களைப் பாதுகாக்கப் பசுமை இல்லங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலைசார் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதுமே இதன் முதன்மை நோக்கம் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes