General31 August 2026

22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!

22வது திருத்தச் சட்டம் தொடரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்

உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிடாது என்றும் நீதித்துறையில் தேவையான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் ஏற்பாடுகள் சில குறிப்பிட்டவர்களுக்கு அனுகூலமாகச் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

இந்த வயது நீடிப்பானது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கமளித்தார்.

பல ஆண்டுகளாக முறையான சீர்திருத்தங்கள் செய்யப்படாத காரணத்தினால் நீதித்துறையில் சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்தநிலையில், ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் நீதித்துறையை வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளாகும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் உறுதியான பலன்களை மக்கள் காண முடியும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes