General31 August 2026

கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!

கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 இன்று நீதிமன்றம் செயல்படாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் (CLS) அறிவித்துள்ளது.

கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம விடுத்துள்ள அவசர அறிவிப்பின்படி, நிலவும் சூழ்நிலை காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30, 2026 அன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த மேலதிக அறிவுறுத்தல்களை நீதிபதிகள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் அமைப்பு நிலையற்றதாக இருக்கலாம் என எச்சரித்துள்ள கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes