General01 September 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்கள்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
திறந்த வெளியில் வேலை செய்வோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனமாகப் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன் குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, லேசான வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்கள் முற்றாக வறண்டுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர்மட்டம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு 7 மாவட்டங்களில் 81 ஆயிரத்து 929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes