General02 September 2026

22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற பரிசீலனைகள் நிறைவு - வியாக்கியானம் சபாநாயகருக்கு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை  நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இநத்நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம்,22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையுவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes