General03 September 2026

இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!

உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.

இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes