General04 September 2026

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை இரண்டு நாட்களாக மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமே மனுக்களை விசாரித்தது.

வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானதா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லா ஃபோரம் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட 15 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த திருத்தச் சட்டமூலத்தின் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், அடிப்படை மனித உரிமைகளும் மீறப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes