General08 September 2026

தனியார் துறைக்கும் இணையவழி தொடருந்து பருவகாலச் சீட்டு - ஒக்டோபர் 1 முதல் வீட்டிலிருந்தே பெறலாம்!

தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த தொடருந்து பருவகாலச் சீட்டுகளை (Season Tickets) இணையவழியில் (Online) பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, seatreservation.railway.gov.lk என்ற இணையவழி ஊடாக மாதாந்த தொடருந்து பருவகாலச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் அரச துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் அடிக்கடி தொடருந்து நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, உத்தியோகபூர்வ ஆசன முன்பதிவு இணையத்தளத்தின் மூலம் பருவகாலச் சீட்டுகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விரிவாக்கப்பட்ட சேவையின் உத்தியோகபூர்வ தொடக்க விழா இன்று (8) பத்தரமுல்லையில் உள்ள 'வோட்டர்ஸ் எட்ஜ்' விருந்தகத்தில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தற்போது நடைமுறையிலுள்ள முறையின் கீழ், பயணிகள் விண்ணப்பப் படிவம், நிழற்படம், வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஆகியவற்றைச் சமர்ப்பித்து முதலில் அடையாள அட்டையைப் பெற வேண்டும்.

அத்துடன், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட 10 நாட்களுக்குள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள் மட்டுமே பருவகாலச் சீட்டுகளைப் பெற வேண்டிய சிரமம் காணப்பட்டது.

எனினும், புதிய டிஜிட்டல் முறையின் கீழ் பயணிகள் தங்களது கணக்கு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், வீட்டில் இருந்தவாறே பருவகாலச் சீட்டுகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆசன முன்பதிவு வசதிகளைக் கொண்ட எந்தவொரு தொடருந்து நிலையத்திலும் பயணிகள் தங்களது கணக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

முன்னதாக, அரச ஊழியர்களுக்கான சலுகை அடிப்படையிலான இணையவழி பருவகாலச் சீட்டு விநியோகம் கடந்த ஜூன் 9 ஆம் திகதி தொடக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes