General09 September 2026

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்புப் பேச்சுவார்த்தை - ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ராஜ்நாத் சிங்குடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இராணுவ கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

செப்டம்பர் 10ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ராஜ்நாத் சிங், தனது விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அமுலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இதனையொட்டி, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, சிறப்புப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes