General08 September 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்: நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

எல்லை தாண்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு கடந்த மார்ச் 30ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய, நாட்டின் எல்லைகளைக் கடந்தும் இடம்பெறும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக தீவிர குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளையும் இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
Related recommendation
Hiru TV News | Programmes