General08 September 2026

உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தச் செயற்பாடுகள் உள்நாட்டு பொறிமுறை அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் நிலையான முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின், அது நாட்டின் உள்நாட்டு யதார்த்தங்களுக்கு அமைவாகவும், உள்நாட்டு பொறிமுறையின் மூலமுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், 'டிட்வா' (Ditwah) சூறாவளி பேரழிவு மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, 2025 ஆம் ஆண்டில் இலங்கை 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவையின் 60/1 தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் காலக்கெடுவை நீடிக்கும் சரத்துக்கள் உட்பட அந்தத் தீர்மானத்தை இலங்கை ஆதரிக்கவில்லை என மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறான வெளிப்புறப் பொறிமுறைகள் பிரிவினைகளை உருவாக்கி, ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் உள்நாட்டு பொறிமுறைகளை பலவீனப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து அவர் மேலும் விளக்குகையில், சர்வதேசப் பங்காளிகளுடன் கலந்தாலோசித்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் புதிய சட்டமூலம் எதிர்வரும் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதேபோன்று, இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகத் பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைகள் நிறைவடைந்துள்ளன.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகிய சுயாதீன நிறுவனங்களின் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்டக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான குழுவொன்று 'சுயாதீன வழக்கு தொடுநர்' அலுவலகத்தை நிறுவுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

இதேவேளை, மோதல் காலத்தில் கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்ற இலங்கை ஏதிலிகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்குச் விசேட குடிவரவு வசதிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அத்துடன், மலையகத் தமிழ் மக்களின் நீண்டகாலக் குறைகள் முதன்முறையாக விரிவாகவும் விரைவாகவும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறைகளை மனித உரிமைகள் பேரவை நடுநிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மதிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இலங்கையின் பிரதிநிதி, அமைதியான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கோரினார்.
Related recommendation
Hiru TV News | Programmes