General09 September 2026

நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை

நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி தொடர்வதைத் தவிர்த்து, அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீளாய்வு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழான பொது விவாதத்தில் உரையாற்றிய ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் வளங்கள் ஆயுத மோதல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்ட உலகின் அவசரமான மனித உரிமை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நாட்டுக்கே உரிய ஆணைகள் தெளிவான நோக்கங்கள் மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளின் அடிப்படையில் அவ்வப்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் நாட்டுக்கே உரிய தீர்மானங்களில் காலாவதி விதிகள் மற்றும் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தேசிய பொறிமுறைகள், கலந்துரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி மூலம் ஒரு நாடு மனித உரிமைகள் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அந்த நாட்டுக்கான ஆணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான பாதை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய பொறிமுறைகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த முன்னேற்றத்தை மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஆணைகள் தொடர்வது நிறுவன ரீதியான தொடர்ச்சிக்காக அல்லாமல், தெளிவாக நிரூபிக்கப்படும் தேவை மற்றும் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தூதுவர் சுமித் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் நிலைமையின் எழுத்துமூல புதுப்பிப்பு அறிக்கை நேற்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes