General12 September 2026

நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன என்பவரால் பெறப்பட்ட கையூட்டல் பணத்தின் ஒரு பகுதி நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான ஆலோசனைகளின் பேரில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றை தாக்கல் செய்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்த பின்னர், நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கொடுக்கல் வாங்கலின் போது, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒரு கோடி ரூபாவை கையூட்டலாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes