General13 September 2026

வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அநுராதபுரத்தில் நேற்று (12) நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு, ஆதரவளித்த பொதுமக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், படையெடுப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற அநுராதபுர இராச்சியத்தின் கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தான் பிறந்த மண்ணின் மீது அன்பும் 'நமது நாடு' என்ற உணர்வும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது நம்பிக்கை என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும் தாய்நாட்டைப் பாதுகாத்துக் கட்டியெழுப்பியதை நினைவு கூர்ந்த அவர்,நாட்டின் கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய அபிவிருத்தியடைந்த தேசத்தை மீண்டும் உருவாக்குவதே தமது நோக்கம் என அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தனது நீண்டகால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர் மற்றும் எப்போதும் பலமாக இருக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes