General14 September 2026

அந்நியச் செலாவணியை சேமிக்க அதிரடி நடவடிக்கை! இலங்கையில் தொடங்கும் பிரம்மாண்ட சூரிய மின்சக்தி திட்டம் !

இலங்கையின் தேசிய மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 300 மெகாவாட் (MW) மின்சாரத்தைச் சேர்க்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் சூரிய மின்சக்தி திட்ட வரிசையில், முதலாவது திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தேசிய மின்சார அமைப்பில் இணைக்கும் தொடக்க விழா, துறைமுகங்கள், சிவில் வானுார்தி போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நேற்று (13) காலை வேயங்கொடையில் நடைபெற்றது.

இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 300 மெகாவாட் கொள்ளளவு கொண்ட தரைவழி சூரிய மின்சக்தி (ground-mounted solar) திட்டங்களில், முதன்முதலாக தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தின் மூலம் 3 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், இதனை 'ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட்' (Hayleys Fentons Limited) நிறுவனம் செயல்படுத்துகிறது.

எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளால் இந்த திட்டம் கண்காணிக்கப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தனியார் துறையின் பங்கேற்புடன் இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, புதைபடிவ எரிபொருட்களுக்காக (fossil fuels) ஆண்டுதோறும் அதிக அளவிலான அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்த அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் சேமிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய திட்டங்கள் ஒரு முதலீடாகவும், அதேவேளையில் பொதுமக்களுக்கான சேவையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes