General14 September 2026

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறி செயற்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டால், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய இறக்குமதியாளர் முகவரி மற்றும் விவரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ளது.

விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் வர்த்தகர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்பாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுக்கவும், நியாயமற்ற விலை நிர்ணயத்தைத் தடுக்கவும் விலை வெளிப்படைத்தன்மை அவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes