General15 September 2026

சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் அதிகாரிகளா நீங்கள்? பதவிகளுக்கு வருகிறது கடுமையான கட்டுப்பாடு!

சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பணியாற்றும் அரச துறை பதவிகளுக்கான சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கான முன்மொழிவு அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, சிறுவர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் அரச பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள், நியமனத்திற்கு முன்னர் காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து சான்றிதழொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், ஏற்கனவே இவ்வாறான பதவிகளில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் தமது சேவைக் காலத்தின் குறிப்பிட்ட கட்டங்களிலும், வேதன உயர்வு பெறும் சந்தர்ப்பங்களிலும் குறித்த சான்றிதழைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் பொறுப்புகளில் நியமிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes