General15 September 2026

முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யக்கலமுல்ல மற்றும் கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யக்கலமுல்ல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில், நேற்று நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்விரோதம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes