General17 September 2026

நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!

அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகைகளைத் திரட்டி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த நபருக்கு, வைப்புகளைப் பெறுவதை உடனடியாக நிறுத்துமாறும், நிலுவையில் உள்ள வைப்புப் பணத்தை மீளச் செலுத்துமாறும் இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

தம்புள்ளையைச் சேர்ந்த பேமதாசகே இந்திக பிரேமகுமார என்பவர் 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கடன் ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கி, 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிப் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளார்.

நிதியியல் வியாபாரச் சட்டத்தின் 42 ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 2026 ஜூலை 15 அன்று இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.

இதனையடுத்து, உறுதிமொழிப் பத்திரங்கள் அல்லது வேறு எந்த வழிகளிலும் பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகைகளை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து பெற்ற அனைத்து நிலுவை வைப்புப் பொறுப்புகளையும் மீளச் செலுத்த வேண்டும் என்று மத்திய வங்கி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதி, 2026 செப்டம்பர் 16 அன்று மத்திய வங்கி இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த நபரால் இதுவரை சேகரிக்கப்பட்ட மொத்த வைப்புத் தொகை, பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் எண்ணிக்கை அல்லது மீளச் செலுத்த வேண்டிய தொகையின் அளவு குறித்த விபரங்கள் மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes