General19 September 2026

அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் (Anojan Sivarasa) வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக ரிஷாத் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

இந்த மரண தண்டனை பற்றிய தகவல்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது
இந்தநிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னரிடம் அனோஜனின் நிலை குறித்து அவசர கோரிக்கை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று மரண தண்டனைக்குள்ளான ரிசானா நபீக்கிற்கு நேர்ந்த கதி, அனோஜனுக்கும் ஏற்படக் கூடாது என்று ஐக்கி்ய சமாதான கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சவூதியின் கடுமையான சட்டங்களை விட, மன்னிப்பும் கருணையுமே இஸ்லாத்தின் உண்மையான சாராம்சமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சவூதி அரசு இஸ்லாத்தின் மன்னிக்கும் பண்பின் அடிப்படையில் அனோஜனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இலங்கையரான அனோஜனுக்கு கருணை வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தகவல் குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்ட அலி சப்ரி, மரண தண்டனை விதிக்கப்பட்டதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes