General19 September 2026

இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!

ஈரானில் தற்போதுள்ள இஸ்லாமிய ஆட்சிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால மோதலின் வரலாற்றுப் பின்னணியை 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என பேராதனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1979ஆம் ஆண்டுக்கு முன்னர் ஷா முகமது ரேசா பஹ்லவி தலைமையிலான ஆட்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தது. எனினும், 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஷா ஆட்சி முடிவுக்கு வந்து, அயதுல்லா ருஹொல்லா கமேனி தலைமையிலான புதிய அரசியல் அமைப்பு உருவானது.

இதன் பின்னர் அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்ட முக்கியமான திருப்பமாக தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பிணைக் கைதி நெருக்கடி அமைந்தது.

1979 நவம்பர் 4ஆம் திகதி ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியதுடன், 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்கள் 444 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1980 ஏப்ரலில் அமெரிக்கா ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்ததுடன், பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தது.

இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் இராணுவ திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வந்ததாக எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாக, ஈரான் தனது பாதுகாப்புக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes