General20 September 2026

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் ஒக்டோபரிலும் எரிபொருள் விலைக் கட்டுப்பாடு தொடரும்- ஜனாதிபதி

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இத்தகைய விலைக் கட்டுப்பாட்டைத் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு போர் ஆரம்பமானதை தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியதிலிருந்து கடந்த சில மாதங்களில், அந்த சுமையை மக்களின் மீது சுமத்தாமல் எரிபொருள் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையையே கையாண்டு வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் பாதீட்டில் சில வரிவிலக்குகள் மற்றும் வரிச் சலுகைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த முன்மொழியப்பட்ட வரி நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பாதீட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes