General20 September 2026

இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இவற்றையே செய்தது! அமைச்சர் சரோஜா பதில்!

சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முறையை மாற்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளைக் குறைத்துச் சேமிக்கப்பட்ட நிதியைக் கொண்டு அரச ஊழியர்களின் வேதனம் மற்றும் பொதுமக்களின் நலன்புரித் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை - அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டு கால மாற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னுதாரணத்துடன், சலுகை முறையை மாற்றியமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை இரண்டரை இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மீதப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு மூன்று கட்டங்களாக வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரியில் மூன்றாவது கட்டமாக அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேதனத்தை 1750 ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா 'மஹபொல' புலமைப்பரிசில் இன்றைய நிலவரப்படி 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டம், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு, விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் குடிமக்களுக்கான கொடுப்பனவு, விவசாய மற்றும் கட்றொழிலாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விசேட அம்சமாக, சிறுவர் இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு, ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்புக் கணக்கில் இடப்படுகிறது.

இந்த சிறுவர்கள் 18 வயது நிறைவடைந்து சமூகமயமாகும் போது, உயர்கல்வி கற்கவோ அல்லது தொழில் வாய்ப்புகளைப் பெறவோ அவசியமான சேமிப்பு நிதி அவர்களிடம் இருக்கும் எனவும், ஆதரவற்றோரைக் கைவிடாமல் அவர்களுக்காகவும் பொறுப்புடன் செயற்படும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தின் ஆட்சி விளங்குவதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes